மொத்தப் பக்கக்காட்சிகள்

இளைஞர்கள் முதலீடுகளில் அதிக ஆர்வம்: பேங்க் பஜார் ஆய்வில் தகவல்


இளைஞர்கள் முதலீடுகளில் அதிக ஆர்வம்: பேங்க்  பஜார்  ஆய்வில்  தகவல்

இந்திய இளைஞர்கள் மத்தியில் பணம், சொத்து சேர்க்கை ஆகியவை முதல் நோக்கமாக உள்ளன. ஆரோக்கியம் மற்றும் புகழ் ஆகியவை அடுத்த இடங்களைப் பெறுகின்றன. மண்டல அளவிலான மாறுபாடுகளை எல்லாம் கடந்து ஆண் பெண் ஆகிய இருபாலினரின் ஆசைகளும் வீடு வாங்கும் விஷயத்தில் ஒரே மாதிரியாக உள்ளன. 

சொந்தமாக ஒரு வீடு, வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம், உலகை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு ஆகியவை இந்திய இளைஞர்களின் முதன்மை நோக்கங்களாக உள்ளன. 61 சதவீத இளைஞர்கள் தங்களது கனவுகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள கடன் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். 

இந்த அம்சம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் எதிரொலிக்கிறது.

இந்த ஆய்வு முடிவு வெளியீட்டு விழாவில் பேசிய பேங்க் பஜார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் துணை நிறுவனருமான அதில் ஷெட்டி, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக எல்லா வகைகளிலும் புயல் வேக வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. தொழில் நுட்பம், தலைமுறையினர் மற்றும் பார்வைகள் என அனைத்திலுமே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பேங்க் பஜார் நிறுவனம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதலே இந்த மாற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். 

அதன் காரணமாரகவே இந்த 10-ம் ஆண்டு நிறைவை இந்த ஆய்வுடன் கொண்டாட நாங்கள் முடிவு செய்தோம். இதுவே இந்த ஆய்வு மேற்கொள்ள சரியான தருணம் என்று நாங்கள் கருதினோம். இதன் மூலம் இந்திய தனி நபர் நிதிச் சந்தை தொடர்பாக எங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படுவதுடன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று எங்களால் கணித்து அதற்கேற்றார் போல் செயல்பட முடியும். 

இந்த ஆய்வில் நாங்கள் முன்பே எதிர்பார்த்த சில விஷயங்களும் தெரிய வந்துள்ளன. அதே சமயம் ஆச்சரியம் அளிக்கும் விதமாக சில புதிய தகவல்களும் தெரிய வந்துள்ளன. இன்றைய இளைஞர்கள் தங்களது நிதி நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கருதுவது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். 

இந்த இளைஞர்கள் தங்களது தேவைகளுக்கு பெரும்பாலும் சொந்த நிதியைக் கையாளுவதாக 91 சதவீதம் இளைஞர்கள் கூறியது எங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. இந்த இளைஞர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போதும் தொடர்ந்து அவர்களை ஆய்வு செய்து இந்த பிரிவில் மாறி வரும் தேவைகள் குறித்து தகவல்களை வெளியிடுமோம்,” என்றார்.

ஆசைகள் மற்றும் அவற்றை அடைவதற்கான தயார் நிலை ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளி குறித்தும் இந்த ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளி வந்துள்ளன. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோரின் தனிப்பட்ட ஆசை பணம், சொத்து சேர்ப்பதாக உள்ளது. அதிலும் முக்கியமாக சொந்த வீடு வாங்குவதே முக்கிய இலக்காக உள்ளது. 

இந்த ஒரு குறிப்பிட்ட லட்சியத்தில் மட்டும் ஆசைக்கும் தயார் நிலைக்குமான இடைவெளி 12 சதவீதம் உள்ளது. பொதுவாக இளைஞர்களிடம் சேமிக்கும் பழக்கம் இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அதை உடைக்கும் வகையில் சேமிப்பு மற்றும் முதலீட்டில் இளைஞர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிக்செட் டெபாசிட்டுகள், மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றில் அவர்கள் பரவலாக முதலீடு செய்கின்றனர். 

மூன்றில் ஒரு பங்கினர் வாலெட் ஷேரில் முதலீடு செய்வதும் தெரிய வந்துள்ளது. நிரந்தர வைப்புக் கணக்குகள் மற்றும் காப்பீடு ஆகியவை அதிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆசைகள் மற்றும் அவற்றை அடைவதற்கான தயார் நிலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

ஆரோக்கியம் இன்றைய இளைஞர்களின் முக்கிய கவனம் பெற்றுள்ளது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியம் என இன்றைய இளைஞர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த பிரிவிலும் ஆசை மற்றும் அவற்றை அடைவதற்கான தயார் நிலை ஆகியவற்றுக்கு இடையே அதிகபட்சமாக 12 புள்ளி இடைவெளி உள்ளது.

இந்தியாவின் ஆர்வம், கனவுகள் மற்றும் ஆசைகள் தொடர்பான முதலாவது மிகப் பெரிய ஆய்வு குறியீட்டு அட்டவணையில் தெரிய வந்த சில முக்கிய அம்சங்கள்:

தென் இந்தியாவில் அதிக இளைஞர்கள் – அதாவது 88.57 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு தீவிர ஆர்வம் தனிப்பட்ட இலக்கு மற்றும் ஆசைகளுடன் உள்ளனர். அடுத்த படியாக வட இந்தியா 87.5 சதவீதமும், கிழக்கு இந்தியா 86.5 சதவீதமும், மேற்கு இந்தியா 86 சதவீதமும் என்ற அளவில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

மெட்ரோ எனப்படும் எல்லா பெருநகரங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை இளைஞர்கள் அதிகபட்சமாக 88.86 பேர் குறிக்கோள் மற்றும் ஆசைகளை அடையும் இலக்குடன் உள்ளனர். அடுத்தபடியாக ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்கள் இரண்டுமே 88.29 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. 

மெட்ரோ நகரங்களின் இளைஞர்கள் சராசரியாக 86.86 சதவீதம் பேர் தனிப்பட்ட குறிக்கோள் அல்லது ஆசைகளுடன் உள்ளனர். மெட்ரோ அல்லாத நகரங்கள் சராசரியாக 85.87 சதவீதம் என்ற அளவில் இந்த பட்டியலில் உள்ளன.

ஆசைகள் மற்றும் இலக்குகள் குறியீட்டுப் பட்டியலில் பெண்கள் 87.43 சதவீதம் என்ற அளவில் ஆண்களை விட (ஆண்கள் 86.29 சதவீதம்) அதிக சதவீதத்தில் உள்ளனர்.

இந்த ஆசை, ஆர்வம், இலக்கு ஆகியவற்றில் பணம், சொத்து ஆகியவற்றுக்கு அதிக இளைஞர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதாவது இதை தங்களது முக்கிய இலக்காகக் கருதுவதாக 84.43 சதவீத இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தபடியாக ஆரோக்கியம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக 83.86 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர்.

பணம், வாழ்க்கை முறை, ஆரோக்கியம், ஆகியவை தொடர்பான இளைஞர்களின் பார்வைகள் குறித்தும், தங்களது ஆசைகள் மற்றும் அவற்றை அடைவதற்கான தயார் நிலை குறித்தும் இந்த ஆய்வில் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. 12 நகரங்களில் கந்தார் ஐஎம்ஆர்பி நிறுவனத்தின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

1551 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 25 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட, சம்பளம் வாங்கும் ஆண், பெண் என இருபாலரிடமும் ஆன்லைனில் கேள்விப் பட்டியல் மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டு அதன் மூலம் துல்லியமான விவரங்கள் பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 6 இலக்குகளில் எது அதிக முக்கியம், அவற்றை அடைவதற்கான முயற்சிகள் மற்றும் தயார் நிலை உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு இலக்குகளிலும் உள்ள உள் அம்சம் தொடர்பாக ஆழமான நோக்கம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு அட்டவணை தயாரிக்கப்பட்டது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...