மொத்தப் பக்கக்காட்சிகள்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட் - கேம் சேஞ்சர்ஸ்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட் - கேம் சேஞ்சர்ஸ்

கேம் சேஞ்சர்ஸ்

ஆனந்த விகடனில் தொடராக வந்தது ' கேம் சேஞ்சர்ஸ்'. நம் வாழ்க்கையை மாற்றிய சமகாலத்தின் 35 முக்கிய ஸ்டார்ட்அப்களின் கதைகள் இதிலுண்டு.இந்தப் புத்தகம் முழுக்க 'இன்ஸ்பிரேஷன்' பற்றியது. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. (594) தளராத ஊக்கம் உடையவர்களிடம் ஆக்கம் இருக்கும் என்கிறது வள்ளுவனின் வரிகள். அதுமட்டுமல்ல... ஆக்கம் அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும் என்கிறார். அப்படி ஊக்கத்தைக் கைவிடாது ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்கள்தான், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட்... போன்ற ஸ்டார்ட்அப்களை உருவாக்கினார்கள். அவர்கள் தாங்கள் எடுத்த முயற்சியில் முன்னேறியவர்கள் மட்டுமல்ல... வெற்றியின் உச்சத்தைத் தொட்ட மேஜிக்காளர்கள். எப்படி என்கிற கேள்வியில்தான் ஒளிந்திருக்கிறது அந்த மேஜிக். படிப்படியாய் முன்னேற்றத்தில் வரும் தோல்வி, இலக்கை அடையும்போது தோன்றும் சறுக்கல் இவ்விரண்டும் சந்திக்கும் அந்தப் புள்ளி,


மூளையில் ஒளிரும் ஒளிதான் இவர்களை மாத்தி யோசிக்க வைத்திருக்கிறது. இவர்களின் மாற்று யோசனையில் உருவான கண்டுபிடிப்புகள் உலகையே ஆண்டுகொண்டிருக்கின்றன. சட்டென்று உதித்த ஐடியாவை ஆக்கபூர்வ வழியில் செயல்வடிவமாக்கியவைதான், இப்போது உலக மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப்கள். அவை எப்படி உருவாகின என்பதைப் பற்றி ஆனந்த விகடனில் கார்க்கிபவா எழுதிய தொடர் கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது.

கேம் சேஞ்சர்ஸ்
விகடன் பிரசுரம்

https://books.vikatan.com/index.php?bid=2506

விலை: 240இணையத்தில் வாங்க: https://amzn.to/2klyv8t



புத்தகத்துக்காக இதன் ஆசிரியர்  கார்க்கிபவா ட்விட்டரில் எழுதிய  எழுதிய முன்னுரை:

http://iamkarki.blogspot.com/

காலம் ஒருவரை எங்கெல்லாம் இழுத்துச் செல்லுமென்பது எப்போதும் ஆச்சர்யம்தான். 2007ல் வலைப்பூ தொடங்கியபோது அதற்கு ‘சாளரம்’ எனப் பெயரிட்டேன். ‘வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழி காற்று வரத்தான் செய்யும்” என்பது அதன் டேக்லைன். எழுத்தில் எனக்கு ஆர்வமிருந்தாலும் என் வேலை என்பது வேறாக இருந்ததைதான் அப்படி குறிப்பிட்டிருந்தேன். அச்சுப் பத்திரிகைகள் மீது அவ்வளவு ஆர்வம்; ஆனால் வாய்ப்பில்லை. எனவே, வலைப்பூவில் எழுதினேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு வலைப்பூவில் எழுதியவை அச்சுப் பத்திரிகைகளில் வரத் தொடங்கின.

பின்னர், சில பிளாகர்கள் புத்தகம் போடத் தொடங்கினார்கள். எனக்கு வாய்ப்பு வந்தும் அதைத் தவிர்த்தேன். அனுபவங்களை அப்படியே எழுதிவைக்கும் வலைப்பூ (என்) கட்டுரைகளுக்கு அந்தத் தகுதி இல்லையென நம்புகிறேன். அதனால் அப்போது தவிர்த்தேன்.காலம் என் கைப்பிடித்து எங்கெங்கோ கூட்டிப் போனது; சினிமா வரை. இறுதியில் அது என்னை டிராப் செய்த இடம் ஆனந்த விகடன். 2015ல் ஆனந்த விகடனுக்கு நேர்முகத்தேர்வுக்குச் சென்ற நாள் நன்றாக நினைவிலிருக்கிறது. மாதிரி கட்டுரைகளுடன் ஒரு பெரிய ஃபல் எடுத்துச் சென்றிருந்தேன். ஆசிரியர் ரா.கண்ணன் அவர்கள் “உங்க பிளாக் படிச்சிருக்கேன். இன்னைக்கே சேர்ந்துடுங்க” என்றதும் பாரதிராஜா படங்களைப் போல எல்லாமும் அப்படியே நின்றுவிட்டன.

 ஆனந்த விகடன்தான் எனக்கு இதழியலைக் கற்றுத் தந்தது. ’நான் எழுதுறேன்... அத படிங்க’ என்ற சமூக வலைதள போக்கிலிருந்து, வாசகர்கள் விரும்புவதைக் கொடுக்கும் பாணிக்கு என்னை மாற்றியது. ஒரு ஜனரஞ்சக இதழ் வாசகர்கள் மூலம்தான் தன் வடிவத்தை மெருகேற்றிக்கொள்கிறது என்பதை உணர்ந்தேன்.ஆனந்த விகடனில் என் முதல் தொடர் ‘மைல்ஸ் டு கோ’. இயக்குநர் வெற்றி மாறனின் வாழ்க்கையை எழுத்தாக்கும் பொறுப்பு. அதற்கு வந்த வரவேற்பு என் எழுத்து மாறியிருக்கிறது; சரியாகியிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தந்தது. நான் தொழில்நுட்பம் சார்ந்து அதிகம் எழுதிக் கொண்டிருந்ததால் தொடர் பக்கம் அதிகம் வர முடியவில்லை.

ஆனால், ஒருநாள் ஆனந்த விகடனில் எல்லோருக்குமான தொடர் ஒன்றை என்னால் எழுதிவிட முடியுமென ஆசிரியர் ரா.கண்ணன் மட்டும் என்னைவிட அதிகம் நம்பினார். அது நிஜமானது கேம் சேஞ்சர்ஸ் மூலம்தான்.கேம் சேஞ்சர்ஸ் தொடங்கியபோது எனக்குள் பல கேள்விகள்.

இது ஸ்டார்ட்அப்களை அறிமுகம் செய்யும் தொடரா, அல்லது தன்னம்பிக்கைத் தொடரா அல்லது தொழில்நுட்பச் சாத்தியங்களை எளிமையாகச் சொல்லும் தொடரா? ஆரம்பித்த சில வாரங்களிலே வாசகர்கள் தங்கள் கருத்துகளால் கேம் சேஞ்சரைத் தனதாக்கிக் கொண்டார்கள். இந்தத் தொடர் அதன் பிறகு எப்படி அமைய வேண்டுமென்பதை முடிவு செய்ததும் வாசகர்களே. அதனால்தான் 35 வாரங்கள் போனபின்னும் இதை முடிக்க முடியாமல் திணறினேன். சில காலம் கழித்து சீசன் 2 வந்தே ஆக வேண்டுமென அலுவலகத்துக்கே வந்து மிரட்டிச் சென்ற வாசகர் எல்லாம் உண்டு.

கேம் சேஞ்சர்ஸ் புத்தகமாக போடலாம் என முடிவானதும் எனக்கு வலைப்பூ காலம்தான் கண்முன்னால் வந்தது. மீண்டும் ஒருமுறை தொடர் முழுவதும் வாசித்தேன். மெனக்கெடல் இருந்ததை உறுதி செய்துகொண்டேன்.

என்னுடைய முதல் புத்தகம் அரசியல் பேச வேண்டும் அல்லது புனைவாக இருக்க வேண்டுமென்பது என் அப்போதைய ஆசை. புனைவில் தேர்ச்சி போதவில்லை. அரசியலுக்கு வாய்ப்பு வருமென காத்திருக்கிறேன்.இந்தத் தொடர் முழுமையடைய காரணமாகயிருந்த அத்தனை வாசகர்களுக்கும் நன்றி.
கார்க்கிபவா 

உடனிருந்து இதை நேர்த்தியாக்க உதவிய ஆனந்த விகடனின் ஆசிரியர் குழுவிற்கு என் அளவில்லா அன்பும் நன்றியும். ஒவ்வொரு வாரமும் கேம் சேஞ்சர்ஸ்க்காக எழுத்தில் நான் பட்ட மெனக்கெடலைவிட வடிவமைப்பில் பாண்டியன் பட்டது அதிகம்.

 அவருக்கும் நன்றி.சக மனிதனின் வாழ்க்கையை நல்லமுறையில் மாற்றியெழுதும் ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன். இந்தத் தொடரில் நான் எழுதியிருக்கும் பல நிறுவனங்கள் காலப்போக்கில் மாறலாம். வியாபாரத்துக்காக மக்களை ஏமாற்றலாம். அந்த ஆபத்தை உணர்கிறேன்.

ஆனால், ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையை மாற்றியெழுதியவர்கள்; எளிமையாக்கியவர்கள். அந்தப் புள்ளியில்தான் அவர்கள் கேம் சேஞ்சர் ஆகியிருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவதும், அந்தப் புள்ளி நம் வாழ்விலும் வரவேண்டுமென உற்சாகப்படுத்துவதும்தான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்தப் புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். iamkarki@gmail.comx
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...