மொத்தப் பக்கக்காட்சிகள்

ஜே & கே பேங்க்-ன் லாபம் இரு மடங்கு அதிகரித்து ரூ. 465 கோடி


ஜே & கே பேங்க்-ன் லாபம் 

இரு மடங்கு அதிகரித்து

ரூ. 465 கோடி


பொதுத் துறையை சேர்ந்த முன்னணி நிதிச் சேவை அமைப்பாக ஜே&கே பேங்க் (J&K Bank) இருக்கிறது. 2018-19 ஆம் நிதி ஆண்டில் இதன் நிகர லாபம் 129% அதிகரித்து ரூ.465 கோடியாக அதிகரித்துள்ளது. 

முந்தைய  நிதி ஆண்டு உடன் ஒப்பிடும் போது இது ரூ. 202 கோடியாக இருந்தது. 2018-19 ஆம் நிதி ஆண்டில் மார்ச் காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம்  ரூ. 214.80 கோடியாக உள்ளது. 

இது முந்தையை 2017-19 ஆம் நிதி ஆண்டில் 28.41 கோடியாக இருந்தது. சிறு கடன் வளர்ச்சி மற்றும் பி.என்.பி. மெட்லைஃப் (PNB Metlife) நிறுவனத்தில் இருந்த பங்குகளில் பகுதியை விற்றது மூலம் கிடைத்த தொகை போன்றவற்றால் வங்கியின்  மொத்த வருமானம் (total income),2018-19 ஆம் நிதி ஆண்டில் ரூ.8,487 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ. 7,116 கோடியாக இருந்தது.  


2018-19 ஆம் நிதி ஆண்டு மற்றும் 2018-19 ஆம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை முடிவுகளை வங்கியின் இயக்குநர் குழு, ஶ்ரீநகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடத்த கூட்டத்தில்  அறிவித்தது.  

2018-19 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் கடன் வளர்ச்சி 23% மேம்பட்டுள்ளது. நிகர வட்டி வருமானம் (கடன்களுக்கு பெறப்பட்ட வட்டி மற்றும் டெபாசிட்களுக்கு வழங்கப்பட்ட வட்டிக்கு இடையிலான வேறுபாடு) 42% அதிகரித்துள்ளது.

நிகர வட்டி வருமான லாப வரம்பு (NIIM), வங்கியின் நல்ல லாபத்தை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது. அது 2018-19  ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.05% ஆக உள்ளது. 2018-19 ஆம் நிதி ஆண்டில் 3.84%  ஆக உள்ளது. முந்தைய 2017-18 ஆம் நிதி ஆண்டில் இது 3.65% ஆக இருந்தது.

ஜே&கே பேங்க்-ன் சேர்மன் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, சவாலான காலக் கட்டங்களை தாண்டி லாபப் பாதைக்கு வர, குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் வங்கியின் வளர்ச்சிக்கு இயக்குநர் குழுவின் ஆதரவு மற்றும் ஆலோசனை பெரிதும் உதவியாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.

அவர் கூறும் போது, ‘’சவாலான காலக் கட்டத்திலும், மேலாண்மை குழு, வணிகப் பிரிவு தலைவர்கள் மற்றும் செயல்பாட்டு பிரிவின் பணியாளர்கள் ஆகியோர் செயல்பாடு, வங்கியின் சிறப்பான வளர்ச்சி, நிகர வாராக் கடன் மேலாண்மை, வாராக் கடன் வசூல், நிர்வாக மேம்பாடு சிறப்பாக இருந்தது’’ என்றார். 

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் சிறு கடன்கள் மற்றும் எஸ்.எம்.இ (SME) கடன்கள் வழங்க கூடுதல் கவனம் செலுத்தினோம். இந்த வணிக உத்தி மூலம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து எங்களின் சந்தைப் பங்களிப்பு (market share) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நுகர்வோர் மற்றும் வீட்டுக் கடன் பிரிவுகளில் சந்தைப் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. சிறு கடன் மற்றும் வீட்டு வசதிக் கடன் வழங்கியது 79%  அதிகரித்து ரூ. 3,117 கோடியிலிருந்து ரூ.5,384 கோடியாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் கடன்  வழங்கியது மிகவும் அதிகமாக ரூ. 195 கோடியிலிருந்து ரூ. 1,978 கோடியாக அதிகரித்துள்ளது. கார் கடன்கள் 37% அதிகரித்து ரூ.2,000  கோடியிலிருந்து ரூ. 2,741 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் சில்லறை கடன் வளர்ச்சி 33% மேம்பட்டுள்ளது. கார்ப்பரேட் மற்றும் சில்லறை கடன்களின் பங்களிப்பு தற்போது முறையே 43% மற்றும் 57% ஆக உள்ளது. இது ஓராண்டுக்கு முன் முறையே 53% மற்றும் 47% ஆக இருந்தது.என்றார் சேர்மன்.

இந்தச் சாதகமான நிதி நிலை முடிவுகள் எங்களின் நடுத்தர கால இலக்கு வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. வரும் 2021-22 ஆம் நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கியின் மொத்த வணிகம் சுமார் ரூ. 2.50 லட்சம் கோடி, நிகர லாபம் ரூ. 2,000 கோடி, நிகர வட்டி வருமான லாப வரம்பு 3.5-4%, சொத்து மீதான வருமானம் (ROA) 1.3%, பங்கு மூலதனம் மூலமான வருமானம் (ROE) 16% மற்றும் கடன் செலவு (credit cost) 1%-க்கு கீழே என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிநி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் மிகவும் சிறப்பான வணிக வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். மேலும் புதிய வணிகம் மூலம் லாப வளர்ச்சியை நிலையாக பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். வாராக் கடனுக்கான ஒதுக்கீடு இன்னும் 3-4 காலாண்டுகளில் முழுமையாக முடிந்து விடும். அதன் பிறகு நிகர லாப வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம்.என்றார் பர்வேஸ் அஹமத் (Parvez Ahmed).

இந்த வங்கி மாவட்ட அளவில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் புதிய மண்டல அமைப்பை உருவாக்குகிறது.  அதன்படி மாநிலத்தில் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

இந்த வங்கி பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு அதிக அளவில் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது. அவர்களின் அனைத்து நிதித் தேவைகளையும் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இது வங்கியின் காசா (CASA) விகிதத்தை மிகவும் அதிகரிக்கும். தற்போது உள்ள காசா 50.7% , இந்திய வங்கித் துறையில் சிறப்பான ஒன்றாக உள்ளது. காசா என்பது சேமிப்பு மற்றும் சேமிப்பு கணக்கு மூலம் வங்கிக்கு எவ்வளவு தொகை வருகிறது என்பதை குறிக்கும். இது அதிகமாக இருக்கும்பட்சத்தில் வங்கிக்கு குறைந்த செலவில் நிதி கிடைத்து கொண்டிருக்கும்.  
  
பல பிரிவுகளின் கடன் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. நான் முன்னர் சொன்னது போல், எஸ்.எம்.இ கடன்கள், சுற்றுலா உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் அது சார்ந்த சேவைகள், அரசு உள்கட்டமைப்பு, வீட்டுக் கடன், அரசு ஊழியர்களுக்கு தனிநபர் கடன்கள், தோட்டக் கலை, தங்க அடமானக் கடன்கள் போன்றவற்றில் நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில காலாண்டுகளாக இந்தப் பிரிவுகளில் வங்கி வளர்ச்சி கண்டு வருகிறது.  நூதன துணிகர தொழில்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர்களை (startups & new entrepreneurs) ஊக்குவித்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கொள்கை அளவில் ஆதரவு அளித்து வருகின்றன. நாங்களும் மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற திட்டமிட்டுள்ளோம்.,” என பர்வேஸ் அஹமத் பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வங்கியின் மொத்த வணிகம்  2019, மார்ச் 31 உடன் முடிந்த ஆண்டில் ரூ.1,61,864 கோடியாக உள்ளது. இதில், ரூ. 89,638 கோடி டெபாசிட் ஆகவும் ரூ. 72,226 கோடி மொத்தம் வழங்கப்பட்ட கடனாகவும் உள்ளது. வங்கியின் மொத்த வணிகம் ஓராண்டுக்கு முன் ரூ. 1,42,466 கோடியாக இருந்தது. அதாவது, சுமார் 14% வளர்ச்சியாகும். இந்த வங்கி குறைந்த செலவில் நிலையாக நிதித் திரட்டி வருகிறது. இதன் நிதித் திரட்டும் செலவு 4.90% ஆக உள்ளது. காரணம், காசா பங்களிப்பு 50.7% என்கிற அளவில் அதிகமாக இருப்பதாகும். வாராக் கடனுக்கான ஒதுக்கீடு விகிதம் (NPA coverage ratio) முந்தைய காலாண்டை விட சிறிது குறைந்து   64.30% ஆக உள்ளது. காரணம், குறிப்பாக ஐ.எல்&எஃப்.எஸ் (IL&FS) மற்றும் அதன் குழும நிறுவனங்களின் தரக்குறியீடு குறைக்கப்பட்டிருப்பதாகும்.
2019 மார்ச் 31 நிலவரப்படி, மொத்தக் கடனில், மொத்த வாராக் கடன் மற்றும் நிகர வாராக் கடன் விகிதங்கள் முறையே 8.97% மற்றும்  4.89 % ஆக உள்ளன.  ஓராண்டுக்கு முன் இவை முறையே 9.96% மற்றும் 4.90%  ஆக இருந்தன.
முடிந்த நிதி ஆண்டில் இந்த வங்கி ரூ. 2,750 கோடி வாராக் கடனை வசூல் செய்துள்ளது. அதேநேரத்தில், மிகவும் மோசமான மற்றும் சந்தேகத்துக்குரிய வாராக் கடனுக்கான ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

Ø  கடந்த 2017 ஆம் ஆண்டின் ரூ. 1,632 கோடி இழப்புக்கு பிறகு, 8 காலாண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.   
Ø  
மொத்த வணிகம் ரூ. 1,60,000 கோடிக்கு மேல்
Ø  ஐந்தொகை (Balance sheet) வளர்ச்சி ரூ. 1,00,000 கோடிக்கு மேல்

Ø  லாப வளர்ச்சி, முந்தைய ஆண்டை விட  129% அதிகம்


ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 65% சந்தை பங்களிப்புடன் முன்னணி வங்கியாக திகழ்வது, அதிக காசா விகிதம், கடன்கள் மூலமான வருமானம் சிறப்பாக இருப்பது, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நிகர வட்டி வருமானம் 5%க்கு மேல் இருப்பது போன்றவற்றால் பங்குச் சந்தை ஆய்வாளர்கள் இந்த வங்கியின் மீது நல்ல கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த வங்கி இதற்கு முன் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர்த்த இந்தியாவின் இதர பகுதிகளில் பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வந்தது. 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளான சிறு கடன்கள் மற்றும் எஸ்.எம்.இ கடன்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இது வங்கிக்கு அதிக லாபம் ஈட்டி தருவதாக இருக்கிறது. மேலும் இதர வங்கிகள் நுழைய தயங்கும் பகுதிகள் மற்றும் பிரிவுளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இந்த வங்கி அதன் கடன்களை மறுசீரமைப்பு செய்துள்ளதால், அதன் செயல்பாட்டு லாபம் மேலும் மேம்பட்டிருப்பதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், கடன் வளர்ச்சி மிகவும் சிறப்பாக மேம்பட்டிருப்பதால் டயர் I மற்றும் டயர் II  (Tier I and Tier II)  முறையில் ரூ. 1,600 கோடி கூடுதல் மூலதனம் திரட்ட வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த வங்கியின் புத்தக மதிப்பான (Book value) ரூ. 119 விட குறைவான விலையில், தள்ளுபடியில் பங்கு  வர்த்தகமாகி வருவதால் அதன் விலை ஏற வாய்ப்பு இருப்பதாக பகுப்பாய்வாளர்கள் கருதுகிறார்கள்.




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புநாள் ஏப்ரல் 27, 2024 மிகக் குறைந்த கட்டணம்..

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நாள் 27/04/2024 நேரம் : மாலை 7.00 • மியூச்சுவல் பண்டு வழியாக பணத்தை பெருக்குவது எப்படி?  • பங்...