மொத்தப் பக்கக்காட்சிகள்

என்டர ஊரு கோயமுத்தூருங்கோ...! கோவை ரமேஷ் SLST

என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?!?


தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை...

மதுரையைக் கடக்கிறது வைகை...

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி...

தூத்துக்குடியிலே துறைமுகம்,

திருச்சியில் "பெல்', துப்பாக்கித் தொழிற்சாலை, என்.ஐ.டி., இருக்கிறது...

என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை...

வானளாவிய ஒரு கோவிலுமில்லை...

இதிகாசத்திலே இடமுமில்லை...

எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை...

இன்னும் சொல்வதானால், 1827ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, கர்நாடகப் போர்களில் சிதறுண்டு "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....

அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்...?!?

தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்...

இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை...

ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?

விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;

ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்...

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை...

சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.

மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.

கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்...

வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது...

எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே...

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை...

உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...

இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது, வெள்ளைக்கார ஸ்டேன்ஸ் துரையை  பின்பற்றிய லட்சுமி மில் எல் எம் டபிள்யூ துவக்கிய ஜி குப்புசாமி நாயுடு குடும்பத்தினர்,
கோவைக்கு சிறுவானி தண்ணீரை  கொண்டு வந்தவரும், RS புரதத்தை உருவாக்கியவருமான அன்றைய நகர மேயர் வள்ளல் திவான் பகதூர் ரத்தினசாமி முதலியார்,  தமிழகத்தின் முதல் கல்வி அமைச்சராக இருந்து கோவையில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் மற்றும் ஸ்ரீ அவினாசிலிங்கம் மனையியல் பல்கலை கழகத்தை ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தொடக்கி லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு
க்கு மிகச்சிறந்த கல்வி அளித்த டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், தமிழகத்தின் நிதியமைச்சராக மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்து பசுமை புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்பிரமணியம், இந்திய கூட்டுறவு தந்தையாக இருந்து அதற்கு அடித்தளமிட்ட டி.எஸ். ராமலிங்கம் செட்டியார், படிக்காத அறிவியல் மேதை GD நாயுடு,  தனது நான்கு மகன்களுடன் ஐந்தாவது மகனாக தன்னை வளர்த்த சமுதாயத்தை தத்தெடுத்து உயில் எழுதி PSG கல்வி நிறுவனங்களை துவக்கிய PS கோவிந்தசாமி நாயுடு, KG சகோதரர்கள், அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், LG பால கிருஷ்ணன், PRICOL போன்ற  இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்...

எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்...

இடையில் ஒரு மதக்கலவரம் எழுந்தாலும் அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று ஒற்றுமையின் சிகரமாக பெயர் பெற்றிருக்கிறது கோவை...

அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்...

குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி', கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு...

மரங்களை வெட்டினால், வனவிலங்குகளை இடர் செய்தால், ஓடோடி வருகிறது 'ஓசை'...

ரயில் சேவைக்காக, பொதுமக்கள்  நலனுக்காக போராடுகிறது "ராக்'...

குழந்தைகளையும், புதியவர்களையும் கூட  "வாங்க கண்ணு" என அழைக்கும் நேயமிக்க மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்...

உலகத் தொடர்புக்கு அத்துப்படியான ஆங்கிலம்...

இதமான காலநிலை,
சுவையான சிறுவாணி, கண் நிறைய மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை...

இவற்றையெல்லாம் தாண்டி,

*அமைதியை, மனித நேயத்தை விரும்பும்,  மக்கள்,  இங்கே விரவி இருக்கிறார்கள்...* 

சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவை மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்...

புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோரால் இன்று கோவை தொழில் நுட்பத் தயாரிப்புகள் உலகெங்கும் பாரதத் திறமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன...

சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட நல் மனிதர்களால்  கோவை மாநகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி வெற்றி நடை போடுகிறது...

அந்த பெருமையுடன் எல்லோரும் இறுமாப்பாய் சொல்வோம்...

**என்டர* *ஊரு* *கோயமுத்தூருங்கோ* ...!
!!*வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்...
 கோவை ரமேஷ் SLST
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...