மொத்தப் பக்கக்காட்சிகள்

போலி க்யூ.ஆர் கோடு: பாதுகாத்துக்கொள்வது எப்படி?


போலி க்யூ.ஆர் கோடு: பாதுகாத்துக்கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் மட்டும் க்யூ.ஆர் கோடு மூலமாக ஏமாற்றப்பட்டதாக 20 புகார்கள் பதிவாகியுள்ளதால், க்யூ.ஆர் கோடு (QR Code) பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.*

*க்யூ.ஆர் கோடு என்றால் என்ன?*

பெரிய வணிகவளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள்வரை க்யூ.ஆர் கோடு அட்டையில் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தும் முறையை பின்பற்றுகின்றன. க்யூ.ஆர் கோடு என்பது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உடனடியாக செலுத்துவதற்கான வசதி. (Quick Response). ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு பணம் செலுத்தவேண்டுமோ, அவர்களின் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் முறை ஆகும்.


உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா?
நீங்கள் பணம் அனுப்புவதற்கு மட்டும்தான் ஸ்கேன் செய்யவேண்டும். ஆனால் தற்போது சென்னையில் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் பணத்தை ஒருவரிடம் இருந்து பெறுவதற்காக க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க்யூ.ஆர் கோடு ஸ்கேன் ஏமாற்றம் எப்படி நடந்தது?

ஆன்லைன் மூலம் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் தளங்களில் இந்த ஏமாற்றம் நடந்துள்ளது. பொருட்களை வாங்குவதாக சொல்லி, பாதிக்கப்பட்டவரிடம் பேசும் நபர், உடனடியாக பணம் அனுப்புவதாக கூறி, ஒரு க்யூ.ஆர் குறியீட்டை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவைப்பார். அதனை செய்யும் நபரின் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் க்யூ.ஆர் கோடு அனுப்பிய நபரின் கணக்கிற்கு சென்றுவிடும்.

ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாஷிங் மெஷினை ஒன்றை விற்பதாகப் பதிவை வெளியிட, சில மணிநேரத்தில் அவருக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், வாஷிங் மெஷினை நேரடியாக வந்து பார்க்க நேரமில்லை என்றும் ஆனால் தனக்கு பிடித்திருப்பதால், உடனடியாக ரூ. 16,000 செலுத்தி வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். ரமேஷ் தான் கோரிய விலைக்கு ஒருவர் உடனடியாக தனது பழைய வாஷிங் மெஷினை வாங்கிக்கொள்வதாகக் கூறிவிட்டதால், நம்பிக்கையோடு இருந்தார்.

ஒரு சில நிமிடங்களில் ரமேஷின் வாட்ஸாப்பிற்கு ஒரு க்யூ.ஆர் கோடு வந்தது. வாஷிங் மெஷினை வாங்கிக்கொள்வதாகக் கூறிய நபர், ரமேஷை அந்த க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் உடனடியாக பணம் வந்துவிடும் என்றார். ரமேஷ் ஸ்கேன் செய்த அந்த நொடியில், அவரது வங்கிக் கணக்கில் மொத்தம் இருந்த ரூ.32,000 தொகை அந்த நபரின் கணக்கிற்கு சென்றுவிட்டது.

ரமேஷ் ஸ்கேன் செய்த அந்த க்யூ.ஆர் குறியீடு அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த நபர் அனுப்பிய குறியீடு. பணத்தை இழந்த ரமேஷால், அந்த நபரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அந்த நபரின் அலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கேன் செய்வதால் பணம் எடுப்பது எப்படி?

ரமேஷ் போல பலரும் க்யூ.ஆர் குறியீடு ஸ்கேன் செய்து பணத்தை இழந்துள்ளனர் என்கிறார் துணை ஆணையர் நாகஜோதி. ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது, விவரங்களை படித்துவிட்டு பணம் செலுத்தவேண்டும் என்று கூறும் அவர், ''பணத்தை செலுத்துவதற்கு மட்டும் ஸ்கேன் செய்யவேண்டும். பணத்தை மற்றவரிடம் இருந்து பெறுவதற்கு, ஸ்கேன் செய்யவேண்டாம் என்பது பலருக்கு தெரியவில்லை. படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியவர் என எந்த பாகுபாடும் இல்லாமல் பலரும் இந்த அந்த க்யூ.ஆர் கோடு ஸ்கேன் மூலமாக ஏமாற்றப்பட்டுள்ளனர்,'' என்கிறார் அவர்.

ஏமாற்றும் நபர்களை கண்டறிவதில் பல தொழில்நுட்ப சிரமங்கள் உள்ளன என்று கூறுகிறார் துணை ஆணையர் நாகஜோதி. ''க்யூ.ஆர் கோடு குறியீடு அனுப்புபவர், உங்களின் பணத்தை எடுப்பதற்கான அனுமதியை உங்களிடம் பெறுகிறார். நீங்கள் ஸ்கேன் செய்யும்போது அந்த அனுமதி கிடைத்து, உடனடியாக அந்த பணம் உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படுகிறது,'' என்கிறார் அவர்.

''க்யூ.ஆர் கோடு அனுப்பும் நபர்கள் போலியான அடையாள அட்டையை தயார் செய்து அலைபேசி எண்ணை பெற்றுவிடுகிறார்கள். கூகிள் பே, பே.டி.எம். என பலவிதமான பேமென்ட் ஆப் வைத்திருக்கிறார்கள். க்யூ.ஆர் கோடு அனுப்பி பணத்தை அபகரித்தவுடன், அந்த சிம் கார்டை பயன்படுத்துவதில்லை. மேலும் உடனடியாக அந்த பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றிவிடுகிறார்கள் என்பதால், பணம் பலரிடம் கை மாறிவிடுகிறது,'' என்கிறார் துணை ஆணையர்.

மேலும் விவரித்த அவர், ''ராஜஸ்தான், அசாம், பிகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் க்யூ.ஆர் கோடு அனுப்பி ஏமாற்றியுள்ளார்கள். அவர்களை அணுகுவது எளிதானதாக இல்லை. போலியான முகவரி, போலியான அடையாளங்களுடன் இருப்பதால், அவர்களிடம் இருந்து பணத்தை மீட்பதற்கு காலதாமதம் ஆகிறது. ஒரு சில மணி துளிகள் நாம் சிந்திக்கத் தவறுவதால், பெரிய ஏமாற்றங்கள் ஏற்படுகிறது. சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒரு நபர் இதுபோல ஏமாற்றப்பட்டுள்ளார்,'' என்கிறார் நாகஜோதி.

பொருட்களை வாங்கும்போதும் ஏமாற்றப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார் நாகஜோதி. ''ஒரு சிலர், வண்டியை விற்பதாகக் கூறி, போலியான ஆவணங்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்புகிறார்கள். அதையும் நம்பி பணத்தை அனுப்புகிறார்கள். க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து குறிப்பிட்ட பணத்தை அனுப்புவதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிடுகிறது,'' என்கிறார்.

போலி க்யூ.ஆர் கோடு: பாதுகாத்துக்கொள்வது எப்படி?

ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் தங்களிடம் பேசியவர்கள் ராணுவத்தில் வேலை பார்ப்பதாகவும் அல்லது சீருடை பணியாளர் பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க்யூ.ஆர் கோடு ஸ்கேன் ஏமாற்றத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என விளக்கினார் உதவி ஆணையர் வேல்முருகன். ''ஒரு பொருளை பார்க்காமல் ஒருவர் வாங்க சம்மதிக்கிறார் என்பது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டும். அதுவும், நீங்கள் சொல்லும் விலைக்கு உடனே ஒப்புக்கொள்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் பணம் பெற்றுக்கொள்ள ஸ்கேன் செய்ய தேவையில்லை. உங்கள் வீட்டில் அல்லது உங்களுடன் பணிபுரிபவர்கள் என யாரிடமாவது கருத்துக்கேட்டு இதுபோன்ற பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுவது நல்லது,'' என்கிறார் அவர்.

சைபர் குற்ற வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம். ''பணம் உடனடியாக கிடைப்பது சிரமம்தான். பேமென்ட் செயலி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக உள்ளன. அந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் மும்பை அல்லது டெல்லி போன்ற ஊர்களில் உள்ளன. உடனடியாக அந்த செயலி நிறுவனங்களிடம் பேசி தீர்வு கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் வழக்கை முடிப்பதற்கான காலம் அதிகமாக இருக்கும். ஏமாற்றப்படும் நபர்கள் ஒரு சிலர் யூபிஐ பின் நபரைகூட பகிர்ந்துவிடுகிறார்கள். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனையை போன்றது அல்ல இந்த க்யூ.ஆர் கோடு பரிவர்த்தனை,'' என்கிறார் அவர்.

''ஒரு செல்போன் எண் இருந்தால்போதும் ஒருவர் கூகிள் பே, பே.டி.எம். போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம் என்பதால் ஏமாற்றுவது எளிதாக உள்ளது. பதிவு செய்யும் நபர்களின் விவரங்கள், ஆவணங்களை கொடுத்தால்தான் சேவையை பயன்படுத்தமுடியும் என்ற விதியை பேமன்ட் செயலிகள் கொண்டுவரவேண்டும்,'' என்கிறார் கார்த்திகேயன்.




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...