மொத்தப் பக்கக்காட்சிகள்

அங்கீகாரம் இல்லா வீட்டு மனைகளை வரைமுறைபடுத்த தமிழக அரசு புதிய விதிமுறைகள் 2017 - நடைமுறைக்கு சாத்தியம்தானா?

 அங்கீகாரம் இல்லா  வீட்டு மனைகளை வரைமுறைபடுத்த  தமிழக அரசு புதிய விதிமுறைகள் 2017 -  நடைமுறைக்கு சாத்தியம்தானா?

அங்கீகாரம் இல்லாத (அன்அப்ரூவ்ட்)  வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஹைகோர்ட்) தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறியிருப்பதாவது:-

2016, அக்டோபர் 20..!

தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் ஒழுங்கு முறை விதிமுறை - 2017 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சியில் செயல் அதிகாரிகள், கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த நிலங்களை வரையறை செய்வதற்கு தகுதியான அதிகாரிகள்.

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும், நிலத்தின் உரிமையாளர்களும், இந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து, தங்களது நிலத்தை வரையறை செய்து கொள்ளலாம்.
இந்த நிலங்கள் 2016, அக்டோபர் 20 ம்தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும்.

கட்டணங்களோ கட்டணங்கள்.!

இந்த நிலங்களை வரையறை செய்வதற்காக உரிய கட்டணத்தை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும்.

அதன்படி,
மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100,
 நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.60
பேரூராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.30
 கட்டணம் செலுத்த வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மேம்படுத்துவதற்கு என்று தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக மேம்பாட்டு கட்டணமாக மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.600,
 சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.350,
முதல் மற்றும் 2-ம்நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.250,
 பேரூராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.150,
கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.

இதுதவிர வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மாநகராட்சி என்றால் குறைந்தது 4.8 மீட்டர் (16 அடி) அகலத்துக்கு  சாலை அமைக்க வேண்டும். நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் குறைந்தது 3.6 மீட்டர் (12 அடி) அகலத்தில் சாலைகள் அமைக்க வேண்டும். (சாலைகளில் அகலம் ஏன் இவ்வளவு குறுக்கப்பட்டது என யாருக்காவது விடை தெரிந்தால் தெரிவிக்கவும்)

வீட்டு மனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில், திறந்தவெளி பொதுநிலத்தை விட வேண்டும். இந்த திறந்தவெளி பொது நிலம் விடாமல், வீட்டு மனைகள் அமைக்கப்பட்டிருந்தால், அந்த ஒட்டுமொத்த வீட்டுமனைகளின் மதிப்பில் 10% கட்டணமாக வசூலிக்கப்படும்.

அது வேறு, இது வேறு..!

இந்த வீட்டுமனைகளை வரையறை செய்வது குறித்து ஆய்வு செய்ய, ஒரு வீட்டு மனைக்கு ரூ.500 கட்டணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசூலிக்க வேண்டும்.

அதன் பின்னர், ஆய்வு செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை இந்த புதிய விதிமுறைகளின்படி கட்டணம் வசூலித்து வரையறை செய்வதால், அந்த வீட்டு மனையில் அங்கீகாரம் இல்லாத கட்டடங்களையும் வரையறை செய்துவிட்டதாக அர்த்தம் இல்லை.
இந்த அங்கீகாரம் இல்லாத சட்ட விரோத கட்டடங்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை சட்டப்படி மேற்கொள்ள உரிமை உள்ளது. இனிவரும், காலங்களில் வீட்டு மனைகளை அமைக்கும் போது மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெற வேண்டும்.

அதாவது, விவசாய நிலம், நீர் நிலைகள், அல்லது அந்த நீர் நிலைகளை பாதிக்கும் விதமாக உள்ள நிலம், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் வீட்டு மனைகளை உருவாக்க அனுமதி வழங்கக் கூடாது. வீட்டு மனைகளை உருவாக்கும் நபர்கள், இது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இந்த அதிகாரிகள் அந்த நிலங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அதன் பின்னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி வீட்டு மனைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
ஆறு, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளை வீடுகள் கட்டுவதற்கு மாற்றக்கூடாது.

அரசு நிலம், கோவில் நிலம், வக்பு வாரியம் நிலம் ஆகியவற்றிலும் வீடு, கட்டடம் கட்ட அனுமதி இல்லை.

அங்கீகாரம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அனுமதி கிடையாது. 2016  அக்டோபர் 20 ம் தேதிக்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரையறுத்து அங்கீகரிக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

 விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கு வேளாண் இணை இயக்குனரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.


Government Order

http://www.cmdachennai.gov.in/pdfs/go/go78.pdf

நடைமுறைக்கு சிறிதும் சாத்தியமில்லாத  இதனை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள். 

 பொதுமக்களில் பலருக்கு இது குறித்த விழிப்பு உணர்வு இல்லை.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...